×

அரசு பஸ்சில் பயணிகளிடம் நூதன பணமோசடி காசு கொடுத்து டிக்கெட் வாங்கணும்… இறங்கும்போது கொடுத்திடணும்… கில்லாடி நடத்துனர் சஸ்பெண்ட்

கடலூர்: சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் பழைய டிக்கெட்டுகளை பயணிகளிடம் கொடுத்து பண மோசடி செய்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு குளிர்சாதன பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். டிரைவராக சத்தியமூர்த்தி என்பவரும் நடத்துனராக நேரு என்பவரும் இருந்தனர். இந்த பேருந்து வடலூரில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நேற்று முன்தினம் நின்றது. அப்போது அங்கு வந்த சிதம்பரம் பணிமனையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர்கள், பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் என்பதும், இதில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர், பேருந்து நடத்துனர் நேருவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதால் பேருந்தை சிதம்பரம் பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பணிமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் சேலம் பணிமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு அதிகாரிகள், நடத்துனர் நேருவிடம் விசாரணை நடத்திய போது, அவர் சேலத்தில் இருந்து ஏறிய பயணிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்துள்ளார். பின்னர் பயணிகள் அவர்களின் ஊர்களில் இறங்கும் போது, அந்த டிக்கெட்டை வாங்கி வைத்துக்கொண்டு அதே டிக்கெட்டை மற்ற பயணிகளுக்கு கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. பயணிகள் செலுத்திய டிக்கெட் தொகைக்கும், நடத்துனர் வைத்திருந்த தொகைக்கும் வித்தியாசம் வந்துள்ளது. அதாவது நடத்துனர் நேரு சுமார் 2680 ரூபாய் அதிகமாக பணம் வைத்திருந்தார். இதையடுத்து நடத்துனர் நேருவை அதிகாரிகள் நேற்று சஸ்பெண்ட் செய்தனர்.

The post அரசு பஸ்சில் பயணிகளிடம் நூதன பணமோசடி காசு கொடுத்து டிக்கெட் வாங்கணும்… இறங்கும்போது கொடுத்திடணும்… கில்லாடி நடத்துனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Killadi ,Cuddalore ,Salem ,Chidambaram ,
× RELATED ₹18 கோடி மதிப்பில் நடந்து வருகிறது மந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி